பொன்னர் சங்கர் கூத்தில் மரக் கம்பத்தில் இருந்து தவறி விழுந்து தமிழ் நபர் உயிரிழப்பு

நானுஓயா:

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா கிளாஸ்கோ தோட்டத்தில் நடைபெற்ற பொன்னர் சங்கர் வரலாற்று கூத்தின் போது இன்று அதிகாலை (27) ஞாயிற்றுக்கிழமை உயிரிழப்புச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

கூத்தின்போது, 60 அடி உயர மரக் கம்பத்தில் ஏறிய எம். சதாசிவம் (வயது-60) என்பவர் தவறி விழுந்ததில் உயிரிழந்தார் என நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பொன்னர் சங்கர் நாடக நிகழ்ச்சி நேற்று (26) சனிக்கிழமை இரவு ஆரம்பிக்கப்பட்டு, இன்று காலை வரை தொடர்ந்து நடைபெற்ற நிலையில், சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் ஆண்டுதோறும் நடைபெறும் மரக் கம்ப ஏறல் நிகழ்வில், "பெரிய காந்தி" கதாபாத்திரத்தில் நடித்தவராக சதாசிவம் மரத்தில் ஏறிய போது, தவறி விழுந்ததாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments